நந்தினி மாதிரி ஒரு பெண்!

imb39

ஓவியம் : இளையராஜா

நேற்று குலதெய்வமான அங்காளம்மன் கோவில் கெடாவெட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம். மாமாவீட்டு அழைப்பு என்பதால் கட்டாயத்தின் பேரில் கோவிலுக்குச் செல்லுவதாக இருந்தது. பொதுவாக இந்தமாதிரி கும்பல் சேருமிடத்திற்குச் செல்வது எனக்குப் பிடிக்காது. தவிர எனக்குத் தெரிந்தவர்கள் அல்லது சமவயதுடைய இளைஞர்கள் யாரும் இருக்கமாட்டார்கள், இருந்தாலும் என்னுடன் பேசமாட்டார்கள். நானும் தம்பியும் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு யாராவது தெரிந்தவர்கள் வந்திருக்கிறார்களா என்று பார்த்தோம். கோவில் வாசலில் மாமாவும் அக்காவும் குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்தனர். கோவிலுள் நுழையுமுன்னர் என் மாமாவைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு மாமா பொண்ணை மட்டும் அழைத்துக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்தேன். அட..... அவசரப்படாதீங்க... அந்தப் பொண்ணுக்கு வயசு ஒன்றரைதான் ஆகிறது. குழந்தையைத் தூக்கிக் கொண்டே உள்ளே நுழைந்தேன். என்னைமாதிரி வயதிலுள்ளவர்கள், கையில் குழந்தையுடன் இருப்பதைப் பார்த்தால் எல்லாரும், கல்யாணமாகி குழந்தை பெற்றவன் எனும் நோக்கில் பார்க்கக் கூடும். ஆனால் இதற்கெல்லாம் நான் அலட்டிக் கொள்வது கிடையாது. நீங்கள் எல்லோரும் நினைப்பீர்கள், என்னை “ரொம்ப நல்லவன்ன்ன்ன்ன்” என்று... நிச்சயமாக இல்லை.. கோவிலுக்குள் இருக்கும் பெண் சிலைகள் முதற்கொண்டு சைட் அடிக்கும் பலே பேர்வழி நான். பக்தியை பூசிக் கொண்டு நிற்கும் ஒரே இடம் சாமி தரிசனத்தின் போது மட்டும்தான்.

கோவிலில் நீண்ட வரிசை இருந்ததால் வரிசையில் நின்றுகொண்டு மாமா குழந்தையுடன் விளையாடிக்கொண்டே நின்றுகொண்டிருந்தேன். எனக்கு முன்னே ஒரு பெண்ணும் அவள் கையில் ஒரு குழந்தையும் இருந்தது. அந்த பெண்ணருகே தான் நின்று கொண்டிருந்தேன். மாமா குழந்தையிடம் “சூடு... சூடு...” என்று அந்த பெண்ணின் குழந்தையைப் பார்த்து விளையாடிக் கொண்டிருக்கையில் அந்த பெண் மெல்ல திரும்பினாள்...

பொன்னியின் செல்வன் படித்திருப்பீர்கள், அதில் நந்தினியை கல்கி அவர்கள் விவரித்திருப்பாரே... வட்டவடிவிலான முகம், நல்ல பெரிய கண்கள், விழியோரம் கறுத்த மை, அளவான மூக்கு, அதில் பொட்டுவைத்தமாதிரி மூக்குத்தி, சின்னதாய் சின்ன வாய்... உங்களுக்கு எந்த பெண்ணிடமாவது பேசவேண்டும் என்றால் கையில் குழந்தையை வைத்துக் கொண்டு தைரியமாகப் பேசலாம். என் மாமா பையனிடம் ஏதாவது ஒரு பெண்ணைக் காட்டி ”போய் பேசுடா” என்பேன். அவனுக்கு வயது நான்கு.. (என்னைப் போட்டுக் கொடுக்கமாட்டான் என்று நினைக்கிறீர்கள்... அங்கேதான் மிஸ்டேக் செய்கிறீர்கள்) ஆனால் அவன் போய் பேசமாட்டான்... எனக்கு என்னவென்றால், அவன் போய் பேசினால் அந்த சாக்கில் பேசலாம் பாருங்கள்!! ( அவனிடம் தமன்னாவின் போட்டோவைக் காட்டி “ யாருடா இது என்று கேட்டால் “அத்த” என்பான். யாருக்கு அத்தை என்றால், ”நவி மாமாகு” என்பான்.. அப்படி பழக்கி வைத்திருக்கிறேன் ) சரி நாம் மேட்டருக்கு வருவோம். அந்த பெண்ணிடம்

“உங்க பொண்ணா ?” என்று ஆரம்பித்தேன்.

“இல்ல இல்ல.. இது எங்க அக்கா பொண்ணு” என்று அவசராவசரமாக மறுத்தாள்.

“மீரு மனிவாரா?” கேட்டேன் தெலுகில்....

“ம்ம்... ” என்றாள்

”ஏமி குலம்?”

சொன்னாள்.. இதை எதற்காகக் கேட்கிறேன் என்றாள், எங்கள் வழக்கத்தில் ஒரு குலத்திற்கும் இன்னொரு குலத்திற்குமிடையேதான் திருமணம் நடக்கும். நாங்கள் ”மஞ்சாளூர் வார்ளு”.. நான் திருமணம் செய்து கொள்ளவேண்டுமெனில் “கதிரூர் வார்ளு” அல்லது அந்த குலத்தின் அண்ணன் தம்பிமுறை குலங்களிலிருந்துதான் திருமணம் செய்து கொள்ள முடியும். அப்படியே, அப்போஜுலு, பெத்த கொண்டோஜுலு என்று பல குலங்கள் உண்டு. ஒருமுறை என் அவ்வாவிடம் இதைப் பற்றி கேட்டபொழுது, ஆந்திராவில் ஒரு கிராமத்திற்கும் இன்னொரு கிராமத்திற்குமிடையே திருமணம் நடக்குமாம், ஒரு கிராமத்தினர் மஞ்சாளூர் வார்ளு என்றால் இன்னொரு கிராமத்தினர் கதிரூர் வார்ளாக இருப்பார்கள்... மஞ்சாளூரு வார்ளுவில் பிறந்த எல்லாரும் எனக்கு அண்ணன் தங்கச்சியாக இருப்பார்கள் அதேசமயம் கதிரூர் குலம் எனக்கு முறைப்பெண்கள்!! அந்த பெண் குலத்தின் பெயரைச் சொன்னதும் உடனே என் மாமாவுக்குப் போனடித்து எனக்கு தங்கச்சி முறையா அல்லது முறைப்பெண்ணா என்று கேட்டேன்... முறைப்பெண் தான் வரும் என்றார்.. பிறகென்ன??? அந்த பெண்ணும் வேறு தனியாக வந்திருக்கிறாள், பேச இதைவிட நல்ல வாய்ப்பு இருக்காது.

“எந்த ஊர்ல இருந்து வந்திருக்கீங்க?”

“திருப்பூர்தான். நீங்க”

“நானும் திருப்பூர்தான்... ஆனா உங்களை இதுக்கு முன்னாடி நான் பார்த்ததேயில்ல.. கருவம்பாளையத்துக்காரங்களா?”

“அவ்னு..”

“பொண்ணு நல்லா துறுதுறுன்னு இருக்கா... பேர் என்னங்க?”

உடனே அவள், குழந்தையிடம் பார்த்து, “ பேர் அடிகேரு சூடு, பேரு செப்பிடு சாமி...” என்று கட்டாயப்படுத்தினாள். சொல்லவேயில்லை, பிறகு என்னிடம் “ இப்போதான், ஒருவருஷம் தான் ஆச்சு” என்றாள். பெயர், தீபிகா.. (படுகோனே?) மெல்ல மெல்ல கூட்டம் நகர்ந்ததும் சாமி தரிசனம் முடிந்து வெளியே சென்றுவிட்டாள். நான் கொஞ்சம் பொறுத்து வெளியே சென்றேன். கோவிலை ஒருமுறை சுற்றிவிட்டு ஓரிடத்தில் அமர்ந்து தீபிகாவை போட்டோ எடுத்துக் கொண்டிருந்தாள்... எனக்கோ இவளிடம் எப்படி பேசுவது என்று யோசனை... வலிய பேசினாள் என்னை “ஜொள்ளன்” என்று நினைக்கமாட்டாளா? ஆனால் வேறு வழியுமில்லை, இன்றைக்கு விட்டால் பின்னொருநாள் கிடைக்க வாய்ப்பேயில்லை. சொல்ல மறந்துவிட்டேனே... அவளுக்குக் கல்யாணம் ஆகியிருக்கவில்லை. பொதுவாக கல்யாணம் ஆகியிருந்தால் தனியே கோவிலுக்குள் வரவாய்ப்பில்லை, கூடவே கணவனும் வந்திருக்கவேண்டும். அதைவிட அவளது கழுத்தில் தாலியுமில்லை. ஒரே ஒரு சின்ன கோபிச்செயின் அணிந்திருந்தாள். மீறிப்போனால் இரண்டுபவுன் வரும். எங்கள் வீட்டு புதுப்பெண்கள் ஒரு கிலோ தாலிக்கயிறு அணிந்திருப்பார்கள்.. கழுத்து முழுக்க மஞ்சக்கயிறாகத்தான் இருக்கும்.. காதுக்குக்கூட சின்னத் தோடு, அவ்வளவுதான்.. அனார்கலி சுடிதார் அணிந்திருந்தாள். கிளிப்பச்சை வர்ணம் என்று சொல்வார்களே, அந்த இளம்பச்சையில், கொஞ்சம் இறுக்கமான ஆடை, தலையைச் சீவி பின்னாமல், ஒரே ஒரு பேண்டு மட்டும் அணிந்து ஹாயாக விரித்துவிட்டிருந்தாள். அந்த பேண்டையும் எடுத்துவிட்டால் இன்னும் தேவதைமாதிரி கேசம் பரந்து இருந்திருக்கக் கூடும். கையில் கூட சின்னதாக கடிகாரமும் இன்னொரு கையில் ஒரேஒரு கண்ணாடி வளையலும் அணிந்திருந்தாள். பார்ப்பதற்கு எந்த ஆடம்பர தோற்றமுமின்றி வெகு எளிமையாக இருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

சட்டென எனக்கு ஒன்று தோணவே, என்னுடன் இருக்கும் மாமாவின் குழந்தையை தீபிகாவுடன் நிற்கவைத்து போட்டோ எடுக்கும்படி கேட்டேன்.. சரியென்று சிரித்தாள்... (சத்தியமாக இந்த சிரிப்பை நான் எதிர்பார்க்கவேயில்லை) போட்டோ எடுத்து முடிந்தபிறகு என்னிடம் காட்ட, நான் எடுக்கட்டுமா என்றேன். ம்ம் என்றவளிடம் இரு குழந்தைகளும் நின்று கொண்டிருக்கும்படி ஒரு போட்டோவை எடுத்து பெரிமிதத்துடன் காண்பிக்க, “இதேமாதிரிதான் நானும் எடுத்தேன்” என்றாள்.. நம்ம போட்டோகிராபி மூலைதான் சும்மா இருக்குமா? இரு போட்டோக்களையும் பொருத்திப் பார்க்கச் சொல்லி அவளது போட்டோவில் “தலை கொஞ்சம் கிராப் ஆயிடுச்சு, குழந்தைகளைத் தவிர இன்னொருத்தரும் ப்ரேமில் வரார், தீபிகாவோட கைக் அசைஞ்சதாலே நல்லாயில்ல,” என்று குறைகளை அடுக்கினேன்.. சொல்லச் சொல்ல என் உள்மனம் ஓவரா சொல்லி சொதப்பிடாதே என்று எச்சரித்தாலும், என் அறிவு அதற்கு வழிவிடவில்லை. ஆனால் நிகழ்ந்ததோ வேறு... “என் கிட்ட டிஜிகேம் இருக்கு, அதில எடுத்திருந்தா நல்லா வந்திரும்” என்று சப்பை கட்டு கட்டினாள்... இது கேமரா மேல தப்பில்ல, எடுத்தவங்க மேலதான் தப்பு என்று சொல்லவந்தேன்... பென்ஸின் அறிவுரைப் படி பொண்ணுங்க கிட்ட குறையையும் அதிமேதாவித்தனத்தையும் காட்டவும் கூடாது, கண்டுக்கவும்கூடாது... ஆனால் அந்த சப்பகட்டுதான் பெரிய திருப்புமுனையாக இருந்தது எங்கள் நட்பில்... ஆமாங்க, என்ன டிஜிகேம் இருக்கிறது என்று வினவினேன்.

“நிகோனில் XX கேம்” அந்த XX மாடல் எண்.. மறந்துபோட்டது!

“என்கிட்டயும் இருக்குங்க, நானும் கொண்டுவரலை, ஆனால் என்னோட கேனன், DSLR” என்று ஒரு பிட்டு போட்டேன்...

அவளிடம் ஆர்வம் தொத்திக் கொண்டது. உண்மையில் போட்டோகிராபி பற்றிய ஆர்வம் அவளது கண்களில் மிதப்பதை என்னால் பார்க்க முடிந்தது. இதற்குப் பிறகு நாங்கள் பேசிய டயலாக்குகளை இங்கே இரைத்தால் கொட்டாவி விட்டு நீங்கள் கழண்டுகொள்வீர்கள் என்பதால் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். அவளுக்கு போட்டோகிராபி என்றால் இஷ்டமாம், அப்பாவிடம் ரொம்ப நாட்களாக டி.எஸ்.எல்.ஆர் கேட்டு அவர், பொண்ணுங்களுக்கு எதுக்கு அந்த விலையில கேமரா என்று சொல்லி ஒரு வேலைக்காகத டிஜிடல் கேமராவை வாங்கித் தந்தாராம். நிறைய புகைப்படங்கள் எடுத்து வைத்திருப்பதாகச் சொன்னாள். எங்களது பேச்சு அப்படியே கேமராவின் டெக்னிகல் விஷயத்திற்குள் நுழைந்து, கோவிலில் இருந்த காட்சிகளின் வழியாக இறங்கி, போர்ட்ரைட்களுக்குப் போஸ் கொடுப்பவர்களைப் பற்றிய கிண்டல்களைக் கடந்து “கோ” வில் வந்து முடிந்தது. சத்தியமாக எனக்கு நேரம் போனதே தெரியவில்லை. நாங்கள் எடுத்துவந்த அவரவர் அக்கா குழந்தைகள் ஓரிடத்தில் நின்றுகொண்டு அவர்களைக் கவனிக்கமாட்டாமல் அழுது கொண்டிருந்தனர். எனக்கோ இன்னும் பேசிக்கொண்டேயிருக்கலாம் என்றுதான் தோணியது.. என்னிடம் பேச நிறைய மேட்டர்கள் இருந்தாலும் சென்னை மெரினாவில் மதிக்கு தாமரை அண்ணா கொடுத்த அட்வைஸ் ஞாபகம் வந்தது... “ பொண்ணுங்க கிட்ட பேசறப்போது, அவங்களை அதிகம் பேசவிடு”

”எனக்கு நேரமாச்சு” என்று கோவிலை விட்டு விருந்து மண்டபத்திற்கு விரைந்தாள். இப்பொழுது அவளைப் பின் தொடர்ந்து செல்வதா, இல்லை பொறுத்துப் போவதா? பின் தொடர்ந்தால் தவறாக நினைப்பாளோ? என்மீதுள்ள ஜெண்டில்மேன் மரியாதை கெட்டுவிடுமோ என்ற சந்தேகம்... ”கோ” படத்தில் பியா சொல்வதைப் போல, ”எத்தனையோ பேர் என்னைப் பார்த்து ஜொள்ளு விடறாங்க, ஆனா அஸ்வின் (ஜீவா) மட்டும் டிஃப்ரண்ட்”... இப்போதுள்ள பெண்களெல்லாம் ஜொள்ளர்களைப் பார்க்கிறார்களா இல்லை தவிர்க்கிறார்களா?? நீயா நானாவில் கோபிநாத்தை பேசச் சொல்லவேண்டும்!

மண்டபத்தில் நிறையபேர் இருந்ததால் அவளை என் கண்கள் தேடி சலித்தது.. குழந்தையை அக்காவிடம் கொடுத்துவிட்டு, தேடிக் கொண்டிருந்தேன். அதற்குள் பந்திக்கான அழைப்பு வந்தது. இந்தமாதிரி பந்தி விருந்து சமயங்களில் என்னுடைய சுபாவம் என்னவெனில் அருகே மிகப் பழக்கமான ஒருவரை வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவேன்.. இல்லாவிட்டால் தெரியாதவர்களோடு ஏதோ ஹோட்டலில் தனியாக அமர்ந்து சாப்பிடுவதைப் போல இருக்கும். மண்டபத்தில் எனக்குத் தெரிந்தவர்களான மாமாவும் அக்காவும் நான் கோவிலுக்குச் சென்ற நேரத்தில் சாப்பிட்டுவிட்டதால் நானும் தம்பியும் உள்ளே நுழைந்தோம். அதுவரையிலும் அவளைத் தேடிய கண்கள் பிறகு பல்பு அடித்தது... அவளும் சாப்பிட வந்தமர்ந்தாள்.. என்னிடம் சைகையிலேயே சாப்பிட்டாச்சா என்று கேட்டாள். நான் புன்னகைத்துக் கொண்டே இல்லை இனிமேதான் என்றேன். மீண்டும் சிரித்தாள்.. Sands of time ன் காலக்கத்தியொன்று என்னிடம் இருந்திருந்தால் கண்டிப்பாக 2 நிமிடங்களைப் பின்னோக்கி மீண்டும் ரசித்திருப்பேன். அவளுக்கு எதிரேயே அமரும்படியான வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவள் இருந்த வரிசை முழுக்க சைவம், எனது அசைவம். விருந்துகளில் அசைவம் மிக அளவோடுதான் சாப்பிடும் பழக்கம். ஆகையால் அவள் எழும் வரை சாப்பிடப்போவதாக முடிவெடுத்து மெல்ல மெல்ல காலத்தை இழுத்துத் தின்றேன்... அவளைப் பார்ப்பது போல பார்த்து பிறகு வேறிடத்தில் கருவிழிகள் கழண்டோடியது. அவளுக்கு என் மேல் பார்வை சுத்தமாக இல்லை, அருகில் அமர்ந்து கொண்டிருந்த இன்னொரு பெண்ணிடம் பேசியபடியே சாப்பிட்டாள், ஒருவேளை அவள் என்னைப் பற்றிக்கூட பேசிக் கொண்டிருந்திருக்கலாம். இதில் என்னவொரு கொடுமை என்றால், இழுத்து இழுத்து தின்ற எனக்கே வயிறு நிரம்பிவிட்டது, அவளோ மாங்கு மாங்கென்று உண்டுகொண்டிருந்தாள், பொதுவாக பெண்கள் எப்பொழுது ஏதோ டயட்டில் இருப்பதைப் போல இத்துனூண்டு சாப்பிடுவார்கள், இவளோ அதற்கு நேர்மாறு.. இவளையெல்லாம் கட்டிக்கொண்டால் ஒருமூட்டை அரிசி அதிகமாகத்தான் வாங்கணும்போல..

அப்பாடி!! முடித்துவிட்டாள்.. ஆனால் அதன்பிறகு எனக்கு பேச வாய்ப்பே கிடைக்கவில்லை. கும்பல் கும்பலாக நின்று அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்... நல்ல வாயாடியாக இருக்கவேண்டும் என்றாலும் இவளிடம் விஷயஞானம் இருக்கிறது. எந்த டாபிக் ஆரம்பித்தாலும் அதில் ஓரளவு அறிவைத் தேக்கி வைத்திருந்தாள். நாம் ஏன் நம் அம்மா அப்பாவிடம் இந்தப் பெண்ணையே கட்டிவையுங்கள் என்று சொல்லக்கூடாது?? சேசே,,, தங்கச்சி வேறு இருக்கிறாள். பின்னர் நம்மை என்ன நினைப்பார்கள்? கல்யாணத்துக்கு இப்பவே உனக்கு அவசரமா என்று கடிந்து கொள்ளமாட்டார்கள்?? ஆனால் ஒன்றுமட்டும் உறுதியாக நினைத்துக் கொண்டேன். மண்டபத்தை விட்டு வெளியேறும்பொழுது அவளது அலைபேசி எண்ணையாவது வாங்கிக் கொள்ளவேண்டுமென்று.. போகிறபோக்கைப் பார்த்தால் முடியாது போல இருந்தது. தனியாக இருக்கும்பொழுதே கேட்டுத் தொலைத்திருக்கலாம். அவளிருந்த அந்த கும்பலில் யார் யார் அண்ணனோ, தங்கையோ, அக்காவோ, அம்மாவோ? ஏதாவது கேட்கப்போயி ஏடாகூடம் ஆகிவிட்டதென்றால், பணால் தான்.

கிட்டத்தட்ட அவள் கிளம்பும் நேரம்... என்னிடம் வந்தாள், இது எதிர்பார்க்காத நிகழ்வு!!

“உங்க செல்போன் நம்பரைத் தரீங்களா?” என்று தைரியமாகக் கேட்டாள். இத்தனைக்கும் என்னுடன் மாமா, அக்கா, ஏன், அம்மா அப்பாகூட அமர்ந்திருந்தார்கள். எனது அலைபேசி எண்ணைத் தந்தேன்.

“கோவில்ங்கிறதால பத்திரிக்கை கொண்டுவரலை, அடுத்தமாசம் XX தேதி எனக்கு கல்யாணம். நீங்க எல்லாரும் கண்டிப்பா வரணும்” என்று சொல்லிவிட்டு எனது பதிலை எதிர்பார்க்காமல் வெடுக்கென திரும்பினாள்.. எப்படிச் சொல்லுவது? ஒரு சினிமாத்தனமான முடிவாகிவிட்டது. எனக்கு முகமே இல்லை. ஒருமாதிரியாக ஆகிவிட்டேன். பேசாமல் இப்பொழுதே போய் “என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களா?” என்று கேட்டுவிடலாமோ என்றுகூட தோணியது.. பிறகு அந்த நினைப்பிலிருந்து வெளியேறிவிட்டேன். சுமார் மூன்று மணிநேர சந்தோஷம், மிகப்பெரிய பலூனை நன்கு ஊதி ஊதி குண்டூசியால் குத்தி வெடிக்க வைத்ததைப் போல இருந்தது. என்னிடம் மாமா “யார் அந்த பொண்ணு” என்று கேட்டார்... ”தெரியலை” என்றேன். உண்மையில் எந்தவகை சொந்தம் என்று அறிந்து கொள்ளவுமில்லை... பிறகு அவரே புரிந்து கொண்டதைப் போல ”குலம் கேட்டது இந்த பொண்ணுக்காகத்தானா?” என்று கேட்டபடி சிரிக்க ஆரம்பித்தார்... சிரிக்காதீங்க மாமா என்று டென்ஷன் ஆனேன். அவரது செல்போனில் தேடிப் பிடித்து  “போனதே,,,, போனதே... என் பைங்கிளீ... வானிலே” என்ற பாடலைப் போட, கடுப்பானேன்

“என்னங்க மாமா... சிச்சுவேஷன் சாங்கா??”... தம்பி வேற ஏற்றிவிட.... உண்மையில் ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ளவியலாத தொண்டையடைப்பு ஏற்பட்டது.. ஏமாற்றத்தின் வலி வலியது.

”எங்கிருந்தாலும் வாழ்க!!”

பிகு: அந்த பெண்ணின் பெயரை நான் கேட்கவேயில்லை. என்னுடைய பெயரையும் நான் சொல்லவில்லை!!

Comments

அற்புதமான NARRATION.... நிறைய ரசித்தேன்...

சில உதாரணங்கள்:
// கோவிலுக்குள் இருக்கும் பெண் சிலைகள் முதற்கொண்டு சைட் அடிக்கும் பலே பேர்வழி நான் //
// அவனிடம் தமன்னாவின் போட்டோவைக் காட்டி “ யாருடா இது என்று கேட்டால் “அத்த” என்பான். யாருக்கு அத்தை என்றால், ”நவி மாமாகு” என்பான்.. அப்படி பழக்கி வைத்திருக்கிறேன் //
// பெண்களெல்லாம் ஜொள்ளர்களைப் பார்க்கிறார்களா இல்லை தவிர்க்கிறார்களா?? நீயா நானாவில் கோபிநாத்தை பேசச் சொல்லவேண்டும்! //
ம்ம்ம்... ஆனாலும் அந்தப்பெண் இளையராஜா ஓவியத்தை விடவும் அழகாக இருப்பாள் என்று எனக்கு நம்பிக்கையில்லை...
இன்னும் ஒருமாதம் டைம் இருக்கு... அதுக்குள்ளே எதுக்காக நம்பிக்கையை கைவிடுறீங்க...
மனோவி said…
எந்த பதிவிற்கு சென்றாலும் நன்று என்று போட்டு விடுவேன்..

இதற்கு என்ன சொல்ல,
நெசமாவே ரொம்ப நல்ல எழுத்து வளங்க உங்களுக்கு..

அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகலேன்னா முயற்சி பண்ணலாமே?
ஆதவா said…
மிக்க நன்றிங்க ப்ரபா!! ஓவியத்தைக் காட்டிலும் அழகு என்பதைவிட, எனது வேவ் லெண்ட்த்க்கு சட்டென ஒத்துவந்த பெண்ணாக இருந்தாள்!! அவள் மனது மிக அழகாக இருந்தது

///இன்னும் ஒருமாதம் டைம் இருக்கு... அதுக்குள்ளே எதுக்காக நம்பிக்கையை கைவிடுறீங்க...//

அப்பறம்??? எத்தனை பேருங்க கிளம்பியிருக்கீங்க???
பொடனியில போட்டு அனுப்பிச்சி வெச்சிருவாங்க!!! :)

@ மனோவி!!
அந்த பெண்ணுக்கு நிச்சயம் ஆகிவிட்டது!! முதல் வருகைக்கும் ரசிப்புக்கும் மிக்க நன்றிங்க!!
Anonymous said…
மிக அழகான எழுத்து நடை பாஸ்! ரசிச்சுப் படிச்சேன்! :)
The writer must write what he has to say. Not speak it - Ernest Hemingway

இது கண்டிப்பா உங்களுக்கு பொருந்தும்.

நீங்களே விவரிப்பதை போல, கதையை படிக்கும் போது ஒரு உணர்வு (கதைதான...இல்ல அனுபவமா...)

//Sands of time ன் காலக்கத்தியொன்று என்னிடம் இருந்திருந்தால் கண்டிப்பாக 2 நிமிடங்களைப் பின்னோக்கி மீண்டும் ரசித்திருப்பேன்// என்னமோ..போடா..மாதவா....பின்றீங்க போங்க......
ஆதவா said…
சமுத்ரா, பாலாஜி சரவணா, கொழந்த.... மிக்க நன்றிங்க..
இது எனக்கு நிகழ்ந்த அனுபவம் தான்!!
இன்னும் கொஞ்சம் வார்த்தைகளை எடிட் செய்து முயற்சிக்கலாம் என்பது என் கருத்து......தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்..
//இது எனக்கு நிகழ்ந்த அனுபவம் தான்!!//

கோயிலுக்கு போறதில இத்தனை அனுகூலம் இருக்கா....இனி கோயில் சர்ச்ன்னு ஒண்ணு விடாம நானும் கிளம்புறேன்...
ஆதவா said…
இதெலென்னங்க தவறு இருக்கிறது.. உங்கள் கருத்து நீங்கள் சொல்கிறீர்கள் அவ்வளவுதான்... மீண்டும் படித்தபிறகு இன்னும் எடிட் செய்திருக்கலாம் என்று எனக்கும் தோணியது!!
ஹேமா said…
ம்...அனுபவம்.ஆதவா !
நல்ல அனுபவம் :-))
ஒரு சம்பவத்தை விவரிக்கையில் டீடெய்ல் அதிகம் இருந்தாலும் பிரச்சனை..அதே சமயம் டீடெய்ல் கம்மியா இருந்தாலும் பிரச்சனை...ரசத்துக்கு போடற உப்புமாதிரி.உங்களுடையதில் சிற்ச்சில இடங்களில் கொஞ்சம் கூடுதல்...ஆனாலும் ரசிக்கத் தோன்றுகிறது.

அப்புறம் நந்தினி மேட்டர்..விடுங்க பாஸ் நம்ம காட் எப்பவுமே இப்பிடித்தான்...
sakthi said…
ஆதவா கண்ணில் நீர் கோர்த்துவிட்டது ::)))
sakthi said…
அழகாய் தொய்வின்றி விவரிக்கும் எழுத்து நடை உன்னுடையது ஆதவா

வாழ்த்துக்கள் ::)))
படத்தைப் பார்த்தமும், கதைக்குள் ஆஜராக முடியலை...

ஓவியம் அருமையாக....பேசும் படமாக வரையப்பட்டுள்ளது.
வாழ்த்துக்கள் இளையராஜாவுக்கு.
தவிர எனக்குத் தெரிந்தவர்கள் அல்லது சமவயதுடைய இளைஞர்கள் யாரும் இருக்கமாட்டார்கள், இருந்தாலும் என்னுடன் பேசமாட்டார்கள்//

பொண்னுங்க கூட பேச சான்ஸ் கிடைக்கும் இடம் கோவிலாச்சே,
பசங்க எல்லாம் நம்மளை கழட்டி விட்டிட்டு, பொண்ணுங்க பின்னாடி எல்லே ஓடிடுவாங்க.
.. கோவிலுக்குள் இருக்கும் பெண் சிலைகள் முதற்கொண்டு சைட் அடிக்கும் பலே பேர்வழி நான். பக்தியை பூசிக் கொண்டு நிற்கும் ஒரே இடம் சாமி தரிசனத்தின் போது மட்டும்தான்.//

வெளிப்படையாகவே உண்மையை ஒத்துக்கிறீங்க...

அஃதே....அஃதே....
( அவனிடம் தமன்னாவின் போட்டோவைக் காட்டி “ யாருடா இது என்று கேட்டால் “அத்த” என்பான். //

நம்ம பசங்களின் சினிமாக் கனவுக் கன்னியையும் சரியாத் தான் புரிஞ்சு வைச்சிருக்கிறாங்க போல...
“இல்ல இல்ல.. இது எங்க அக்கா பொண்ணு” என்று அவசராவசரமாக மறுத்தாள்.

“மீரு மனிவாரா?” கேட்டேன் தெலுகில்....

“ம்ம்... ” என்றாள்//

கதை இப்பூடிப் போகுதா...ஹி..ஹி...

”ஏமி குலம்?”
பொதுவாக கல்யாணம் ஆகியிருந்தால் தனியே கோவிலுக்குள் வரவாய்ப்பில்லை, கூடவே கணவனும் வந்திருக்கவேண்டும். அதைவிட அவளது கழுத்தில் தாலியுமில்லை. ஒரே ஒரு சின்ன கோபிச்செயின் அணிந்திருந்தாள். மீறிப்போனால் இரண்டுபவுன் வரும். எங்கள் வீட்டு புதுப்பெண்கள் ஒரு கிலோ தாலிக்கயிறு அணிந்திருப்பார்கள்.. கழுத்து முழுக்க மஞ்சக்கயிறாகத்தான் இருக்கும்//

எடுங்கய்யா, அந்த அருவாளை!
குடும்ப பொண்ணுங்களை எப்பூடியெல்லாம் நம்ம ஆளுங்க நோட் பண்ணி வைக்கிறாங்க...
நம்ம போட்டோகிராபி மூலைதான் சும்மா இருக்குமா?//

மூளை...ஹி..ஹி...
Sands of time ன் காலக்கத்தியொன்று என்னிடம் இருந்திருந்தால் கண்டிப்பாக 2 நிமிடங்களைப் பின்னோக்கி மீண்டும் ரசித்திருப்பேன்.//

உடம்பெல்லாம் ஏதோ பண்ணுது சகா.
அருமையாக கதையினை நகர்த்துகிறீர்கள்.
இருந்த வரிசை முழுக்க சைவம், எனது அசைவம். விருந்துகளில் அசைவம் மிக அளவோடுதான் சாப்பிடும் பழக்கம். ஆகையால் அவள் எழும் வரை சாப்பிடப்போவதாக முடிவெடுத்து மெல்ல மெல்ல காலத்தை இழுத்துத் தின்றேன்...//

இது கொஞ்சம் உதைக்குதே சகா...

கோவில்களில் அசைவம் பரிமாறுவார்களா?
இவளோ அதற்கு நேர்மாறு.. இவளையெல்லாம் கட்டிக்கொண்டால் ஒருமூட்டை அரிசி அதிகமாகத்தான் வாங்கணும்போல.//

எங்க கிளாசிலையும் ஒரு அழகான பிகர் ஸிலிம்மா, இருந்திச்சு,
எவ்வளவு சாப்பிடுவீங்க என்று கேட்டேன்,

கனக்க இல்லை, ஒரு நீத்துப் பெட்டி புட்டுத் தான் சாப்பிடுவேன் என்று சொல்லிச்சு.
கோவில்ங்கிறதால பத்திரிக்கை கொண்டுவரலை, அடுத்தமாசம் XX தேதி எனக்கு கல்யாணம். நீங்க எல்லாரும் கண்டிப்பா வரணும்” என்று சொல்லிவிட்டு எனது பதிலை எதிர்பார்க்காமல் வெடுக்கென திரும்பினாள்.. எப்படிச் சொல்லுவது? ஒரு சினிமாத்தனமான முடிவாகிவிட்டது.//

மிகுந்த ஆவலுடனும், சுவாரசியத்துடனும் நகர்ந்து வந்த கதையின் முடிவினை நகைச்சுவையாக மாற்றி விட்டீர்களே சகோ.
உண்மையில் ஒரு அழகான காவியத்தை, கோவில் மணல் வெளியில் நின்று தரிசித்ததைப் போன்ற உணர்வு!

வட்டார மொழி வழக்கு மண் வாசனை எனும் பகுதிக்கு அணி சேர்த்து நிற்க, மிகவும் இலாவகமாகக் கதையினை நகர்த்தி விட்டு, இறுதியில் ஒரு நகைச்சுவை கலந்த, ஏமாற்றம் கலந்த முடிவினைத் தந்திருக்கிறீர்கள்.
நந்திரி மாதிரி ஒரு பெண்- சீரியஸ்ஸான தருணத்தில் சிரிப்பை வர வழைத்து விட்டு எஸ் ஆகி விட்டாள்!
என் கமெண்ட்ஸ் எல்லாவற்றையும் காணோம் சகோ...

ஸ்பாம் பெட்டியினுள் போய் விட்டது.
மீண்டும் எடுத்துப் போட முடியுமா?
ஆதவா said…
இந்த அனுபவப் பதிவை அண்வணுவாய் படித்து ரசித்து பின்னூட்டமிட்ட நிரூபனுக்கு எப்படி நன்றி சொல்வது?
மிகவும் நன்றி நண்பா.. நானே எதிர்பார்க்கவில்லை.. இனியொருபதிவில் இப்படித்தரமுடியுமா என்றும் தெரியவில்லை!!!
மிக்க மகிழ்ச்சி நண்பரே.
ஆதவா said…
///கோவில்களில் அசைவம் பரிமாறுவார்களா?///

நான் சென்றதே ஒரு கெடாவெட்டுக்குத்தான் நண்பா... கோவிலைச் சுற்றியுள்ள விடுதிகளில் பரிமாறுவார்கள்.. ஒருசில கோவில்களில் சாமிக்கு முன் படையலும் உண்டு
வலைச்சரத்தில் உங்களை பற்றி குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ... http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_08.html

On a seperate note - too good post... especially the way you narrated... :))))
அன்பின் ஆதவன்

கதை ஓட்டம் இயல்பாய்ச் செல்கிறது. கோவிலுக்குச் செனற பொழுது ஒரு பெண்ணைப் பார்த்து பேசி மணம் புரியலாமா எனத் தடுமாறும் போது எதிர் பாரா திருப்பம். வ்ர்ணனைகள் அழகாய் இருக்கிறது. பட்ம் சூப்பர். நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா
Unknown said…
செம்ம ஜி உங்க கூட சேர்த்து நானும் அந்த பொண்ண சைட் அடிக்க ஆரம்பிச்சுட்டேன்,..