நிர்வாணம்



Thanks : http://www.serbianaart.com

பொழுது புகுந்த மோனக்கிறுக்கால்
ஒளித்திரள் பட்டுத் தெறித்த
பகலாகத்
துடித்துக் கொண்டிருந்தேன்

நெடுமலையில் ஊறிக் கசிந்த
மணற்த் திட்டினைப்போல்
என்னை விட்டு நழுவிக் கொண்டிருந்தது
நிர்வாணம்

நுரைகுமிழிகளைத் தொட்டுடைக்கும்
விளையாட்டில், பருவம் வென்றது
எப் பணயமுமின்றி
தோற்றோடியது நிர்வாணம்

நெய் தகழியில் உலாத்தும் தும்பியென
நெடுநாட்கள் ஒவ்வொன்றாய்
ஆடையின்மையின் நினைவுகள்
இழுத்துச் சென்றன

நிர்வாணம் என்பது
சட்டெனத் தோன்றி மறையும்
துருவாசன் கோபங்கள்
நில்லாமை அதன் பாவம்
அப்பட்டம் அதன் குற்றம்

வெயிலெறிந்த முட்கதிர்களைப்
பொடித்தனுப்பும் படலம் போல
இடை நழுவா கச்சையொன்று
இன்றென்னை மெய்காத்து நிற்கிறது
அது
காத்தலெனும் தொழிலினூடே
அழித்தலும் செய்துகொண்டிருக்கிறது.

ஆடைத் திணிப்பெனும் ஏகாதிபத்தியத்தில்
இருமனக் குழப்பங்களுக்கிடையே
தங்கித் தவித்து
இறுதி வரையிலும் இழுத்துக் கொண்டிருந்த
நிர்வாணத்தின் இறுதிமூச்சடக்கி
கவிந்து கிடந்த
மணற் தாழியில் அடைத்து
முன்னிருட்டு அகலும் முன்
மூர்க்கமாய் எரிந்துவிட்டேன்

இனியொருப்பொழுதும்
அதைத் தழுவிப்
பொதுவில் செல்லுதலில்லை
எனும் பொருமலுடன்....

Comments

நல்லா இருக்குங்க !
பொருள் புரிதல் கொஞ்சம் சிரமம்தான். புரியாத வரிகளில் புரிய வைக்கும் கவிஞர்களின் இணைந்துவிட்டீர்கள்
கவிதை வரிகளில் உள்ள ஆழம் மறுபடியும் படிக்கத்தூண்டுகிறது!
உங்கள் வருகை உற்சாகமளிக்கிறது ஆதவா!!
ஹேமா said…
பிரிவுன்னு சொல்லியிருக்கீங்க ஆதவா.கவிதை கஸ்டமாயிருக்கு !
நிர்வாணம் என நேரடியாகவும் பொருள் கொள்ளலாம் அல்லது நமது பால்யத்தின் நல்ல குணங்கள் என்றும்.. பல சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது ஆதவ்.. நன்று..
sivaaa said…
நிர்வாணம் என்பது
சட்டெனத் தோன்றி மறையும்
துருவாசன் கோபங்கள்
நில்லாமை அதன் பாவம்
அப்பட்டம் அதன் குற்றம்

மேற்க்கண்ட வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது. இரண்டு மூன்று மறுவாசிப்பை கோரும் கவிதைப் போல் இருக்கிறது. முடிந்தால் முயற்சிக்கிறேன்.வேறு வழியில்லையெனில் நேரில் தொடர்பு கொள்கிறேன்!!!!!!!.
Arasi Raj said…
Arumai Aadhava :)