உறுபசி - நாவல் விமர்சனம்




தனிமையின் கசப்பும் நிராகரிப்பும் நிறைந்த என் வாழ்வில் புத்தகம் வாசிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே இருந்து வந்திருக்கிறது. பெருத்த அச்சம் ஏற்படுத்தக் கூடிய தனிமை எனக்கு பலநாட்கள் வாய்த்திருந்த போதிலும் வாசிப்பைக் காட்டிலும் எழுதுவதில் அக்கறை எடுத்துக் கொண்டேன். திரு.எஸ்.ராமகிருஷ்ணனோடு உண்டான வாசிப்புத் தொடர்பிலிருந்து வாசிப்பின் அடர்த்தி பெருகிக் கொண்டு வருவதை இப்பொழுது என்னால் உணரமுடிகிறது. அது உறுபசி நாவலின் வழியே நீண்டு கொண்டிருக்கிறது.

பொன்னியின் செல்வனைத் தவிர நாவல் வாசிப்பு குறித்தான எந்த ஞாபகங்களும் என்னிடம் இருந்ததில்லை. நாவல் வாசிப்பு ஒரு வெறுப்பின் சின்னமெனவும், எனது கால அளவுகளை வெட்ட வந்த கருவிகளெனவும் ஒதுக்கியே வந்தேன். நண்பர்கள் சிலர் அது தவறு என்று குறுக்கிட்டாலும் நாவல் புத்தகங்களின் மீதுண்டான என் பார்வை கசப்பும் வெறுப்பும் மிக்கதாகவே தொடர்ந்தது.. பிந்தி ஒருநாள் இணையத்தில் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் உறுபசி படித்துப் பாருங்கள் என்று யாரோ ஒருவர் குறித்திருந்தார். அவரது நோக்கம் நாவல் படிக்க வைப்பதற்காக மட்டுமல்ல. அது ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

உறுபசி. நாவலை வாங்கிய பிறகு உறுபசி என்றால் என்ன என்று தேடத்துவங்கினேன். நண்பர்கள் கூட உறுபசி என்றால் என்ன என்று கேட்கத் துவங்கினார்கள். பசி உறுதல் என்று சொல்லி சமாளித்து வைத்தேன்.

உலர்ந்த சொற்களால் இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது என்ற வரியே நாவலை வாங்கத் தூண்டியது என்றும் சொல்லலாம். எஸ்.ராமகிருஷ்ணனின் உலர்ந்த எழுத்துக்கள் நன்கு காய்ந்த பாறைகளில் படர்ந்திருப்பதாகவும் அதை என் எச்சிலற்ற நாவில் துடைத்து இழுப்பதாகவும் நாவல் படிக்கையில் உணர்ந்தேன். சம்பத் இன் இறப்பை ஒட்டிய நண்பர்களின் நினைவுகளும் சம்பத்தின் காய்ந்த வாழ்வுமே நாவலின் நரம்பாக இருக்கிறது. ஒவ்வொரு பக்கங்களைத் திருப்புகையிலும் ஒரு வெறுப்பின் அடையாளம் இருப்பதாகத் தோன்றி அது எழுத்துக்களின் வளைவுகளில் நின்று என்னையே உமிழ்வதைப் போன்றும் இருக்கிறது. . நாவல் குறித்தான கசப்பை மெல்ல மெல்ல மேகங்கள் விலகுவதைப் போல உறுபசி விலக்கி வந்ததை சில மணிநேரங்களில் உணரமுடிந்தது.

சம்பத்தின் கல்லூரி நண்பர்களான ராமதுரை, அழகர், மாரியப்பன் மற்றும் யாழினி ஆகியோரின் சம்பத் குறித்தான நினைவுகளில் நாவல் பயணிக்கிறது. கல்லூரியில் தமிழ் இலக்கியம் விரும்பிப் படிக்கும் சம்பத்தோடு ராமதுரை, மாரியப்பன், அழகர் மூவரும் நிர்பந்திக்கப்பட்டு படிக்கிறார்கள். சம்பத்தின் வித்தியாசமான வாழ்க்கையும் விசித்திர எண்ணங்களும் மூவரையும் நன்கு கவர்கிறது. சம்பத் யாழினியின் காதலனாக, கடவுள் மறுப்பு கொள்கைகளில் ஈடுபடுகிறான். கம்பராமாயணத்தைக் கிழித்து எரிக்கிறான். அரசியல் கூட்டங்களில் பேசுகிறான். நன்கு மது அருந்தி தன்னைத் தானே ஒதுக்கிக் கொள்ளும் நிலைக்கும் வந்துவிடுகிறான். அவனது கல்லூரி வாழ்க்கை நிராசைகளோடும் மிகுந்த களிப்புகளோடும் செல்லுவதாக இருக்கிறது.

பின்னர் அழகரோடு சொந்த வீட்டுக்குச் செல்லும் போது தன் தந்தையையே வெறிமிகுதியால் விறகுக்கட்டையில் சாத்துகிறான். லாட்டரிச் சீட்டு வாங்கும் பழக்கமுள்ளவனாக இருக்கிறான். அவன் தங்கியிருக்கும் லாட்ஜுக்குக் கீழே உள்ள ஒரு டெலிபோன் பூத்தில் வேலை செய்யும் ஜெயந்தியுடன் உண்டான பழக்கம் சட்டென்று திருமணத்தில் முடிகிறது. அவர்களது திருமணம் தனித்து விடப்பட்ட இருவரின் மனநிலைக்குப் பொருத்தமாக இருக்கிறது. திருமணத்துக்குப் பிந்திய சம்பத்தின் காமம் கடந்தகால நினைவுகளின் மோதலாக இருக்கிறது. யாழினியின் நிராகரிப்பு அவனது வெறிமிகுந்த காமத்தின் தீனியாக மாறியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

சம்பத் ஒரு கிரைம் பத்திரிக்கையில் பிழை திருத்துபவனாக செல்கிறான். அங்கே குரூரமான உலகத்தில் தான் இயங்குவதாக எண்ணிக் கொள்கிறான். அவனது நிலைகொள்ளாத எண்ணங்கள் அக்கூர்மையான குரூரத்தின்பால் அலைகழிக்கப்பட்டு வேலையை உதறுகிறான். அதன் விளைவுகள் அவனை ஒரு மனச்சிதைவுக்கு உள்ளாக்கியிருந்தது. சம்பத் தன் வாழ்வு நெடுகவும் எந்த ஒரு தொழிலையும் விரும்பிச் செய்ததாக இல்லை. அது பூச்செடிகள் வளர்ப்பதாகிலும், ஏன், லாட்டரி வாங்குவதாகிலும் கூட.

சம்பத்தின் மனைவி ஜெயந்தியின் தாம்பத்திய வாழ்வு மிகக்குறுகியதாகவும், சந்தோஷங்களும் வருத்தங்களும் மிகுந்ததாகவும் இருக்கிறது. சம்பத் மருத்துவமனையில் சுருண்டு படுத்திருந்த பொழுது அவளது அலைக்கழிப்பும், தனிமையும் சம்பத்தின் வாழ்வுக்குப் பின்னர் ஏற்படும் மாற்றங்களும் மனதில் தாக்கம் ஏற்படுத்தாமல் இல்லை. ஒருவகையில் சம்பத்திற்கு ஏற்றவள் அவளாக மட்டுமே இருக்கமுடியுமென்று நினைக்கிறேன். யாழினி மிகக் கச்சிதமாக அவனைப் பற்றி தெரிந்து கொண்டு கழற்றிவிடுகிறாள். சம்பத், ஜெயந்தி தனக்குச் சரியானவளாக இருப்பாள் என்று கச்சிதமாக மணமுடிக்கிறான்.

இறப்புக்குப் பின்னர் ஏற்படும் சலனங்கள் குறித்து வெகுநாட்களாக சிந்தித்திருக்கிறேன். இந்த உலகம் ஒவ்வொருவருக்கும் தகுந்த வேலை கொடுத்திருப்பதாகவும் அந்த வேலையின் விளைவுகள் இறப்பிற்குப் பின்னர் ஒளிக்கவேண்டும் என்பதாகவுமே நினைத்துக் கொள்கிறேன். சம்பத்தின் நண்பர்கள் அப்படியானதொரு கலக்கத்தில் இருந்திருக்கவேண்டும்.

ஒருவகையில் சம்பத் ஐப் போன்றுதான் நாமெல்லாமே. மனச்சிதைவை நமக்குள்ளாகவோ, அல்லது நம் எழுத்துக்கள், கோபங்கள், ஏன் சந்தோஷங்களின் வழியேவோ கரைத்துவிடுகிறோம். நமக்குள் நாமே உருகி புதியவனாய் மாறிக் கொள்கிறோம். சம்பத்தின் இச்சைகளைப் போன்றே நமக்கும் இருப்பதாகத் தோன்றுகிறது. என்னைக் கேட்டால் சம்பத் எந்த தவறும் செய்யவில்லை என்றேதான் நினைக்கிறேன்.

நாவலின் வழிநெடுகவும் வன்மத்தின் வண்ணம் ஊறிக் கொண்டே செல்கிறது. அது அடர்த்தி மிகுந்து கழுத்தை இறுக்குவதாகவும்கூட தெரிந்தது ( சட்டென்று நாவலை மூடி வைத்துவிட்டேன். ) திண்ணையெங்கும் தழுவிக் கிடக்கும் வெப்பத்தின் ஊடாக நாவலின் இளஞ்சூடு வாசிக்க இயலாத வெறுப்பைத் தோற்றுவித்ததை உணரமுடிகிறது. எழுத்துக்களை இவ்வளவு சூடாக எழுதமுடியா என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். நாவல் படிக்கப் படிக்க என்னோடு ராமதுரையும், மாரியப்பனும், அழகரும் அவர்கள் சென்ற மலையிடுக்குகளில் பயணித்துக் கொண்டே இருந்தார்கள். சம்பத்தோடு உண்டான நினைவுகளும் நிகழ்வுகளுமாக எழுத்துக்கள் சுற்றிக்கொண்டே இருந்தன.

சம்பத் எனும் தனிமனித வாழ்வின் கசப்புகளும், வன்மங்களும், மனச்சிதைவும் நாவலின் பிளந்த பாதையில் காணக்கிடைக்கிறது. புத்தகத்தைப் படித்து முடித்தபிறகும் சம்பத்தின் மனைவி ஜெயந்தியைப் போன்று நாமிருந்தால் எப்படி இருந்திருக்கமுடியும் என்று கேட்டுக் கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அவளது ஒருபக்க வாழ்வு ஏன் முடிந்துவிட்டது என்று கேட்டுக் கொண்டே இருக்கிறேன். நிகழ்காலத்தின் மீதுண்டான தாபமும் குரூரமும் அலைகளைப் போன்று முட்டி முட்டிச் செல்கிறது.

இன்னொரு வகையில் சம்பத் ஏன் இப்படித் திரிகிறான் என்றும் கேள்வி எழுகிறது. அவனது எண்ணங்கள், நடத்தைகள், எல்லாமே விசித்திரமாகவோ அல்லது கசப்பான மனிதர்களைக் கண்டிராத புதிய அனுபவத்தையோ தோற்றுவிக்கிறது. அவனது காமம் ஏன் அவ்வளவு உமிழ்கிறது? அல்லது எல்லோருடைய காமமும் அப்படியான ஒன்றா?

நாவலின் ஓரிரு இடங்களில் எஸ்.ராமகிருஷ்ணன் தடுமாறியிருக்கிறார். அழகர் கதை சொல்லுவதாக நாவல் செல்கிறது. ஓரிடத்தில் மாரியப்பன் என்று குறிப்பிட்டு, அழகர் மீண்டும் தொடர்வதாக செல்கிறது... நம்பமுடியவில்லை. ஒருவேளை அச்சகப்பிழையாக இருக்கலாம் என்று கருதுகிறேன். அல்லது எனது வாசிப்பனுபவத்தின் குறைபாடாகவும் இருக்கலாம். சொல்லுவதற்கில்லை. அதைப் போன்றே நாவலும் சிறியதாக இருக்கிறதோ என்ற உணர்வும் இருக்கிறது. ஆனாலும் உறுபசியை இன்னும் நீட்டிக் கொண்டிருக்க முடியாதுதான்..

உறுபசி, கடும் பசிக்கு முன்னர் வயிறு ஒலிக்கும் ஓசையைப் போன்று மனதிற்குள்ளிருந்து சப்தங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறது. அது நிரப்பமுடியாத பசியை சுமந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. புத்தகத்தை மூடி நிதானிக்கையில் மனமூலையெங்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் இறைந்து கிடப்பதை மட்டும் உணரமுடிகிறது.

(இது என் முதல் புத்தக விமர்சனம். குறையிருப்பது அறிவேன். குட்டினால் தெளிவேன்.)

உறுபசி- நாவல் (குறுநாவல்)
எழுத்து : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்
பக்கங்கள் : 136
உயிர்மை வெளியீடு
விலை ரூபாய்.75.00

தமிழிஷில் வாக்களியுங்கள்
தமிழ்மணத்தில் வாக்களியுங்கள்
எதிர்வாக்க அளிக்க

Comments

உறுபசி பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன்.விம‌ர்ச‌ன‌ம் ஆத‌வ‌னுக்கே உரித்தான‌ அழ‌கான‌ எழுத்து ந‌டையில் மிளிர்கிற‌து.

எஸ்.ராமகிருஷ்ணனின் தரமான ஆக்கம்.வாய்ப்பு கிடைக்கும் போது நிச்ச‌ய‌ம் ப‌டிப்பேன்.

ம‌ற்ற‌ப‌டி பூனெயில் த‌மிழ்ப்பாலுக்கு த‌ட்டுப்பாடு.ஆன்லைனில் தான் த‌ற்போது சில‌ புத்தக‌ங்க‌ளை பெற்று வ‌ருகிறேன்.

அதெப்ப‌டி, நானும் ஒரு புத்த‌க‌த்திற்கு விம‌ர்ச‌ன‌ம் எழுதி கொண்டேயிருக்கும் அதே வேளையில் நீங்க‌ளும் ஒரு விம‌ர்ச‌ன‌த்தை வெளியிடுகிறீர்க‌ள்.

உங்க‌ள் அள‌வுக்கு இல்லாவிட்டாலும், நானும் இதை ஒரு போட்டியாக‌ எடுத்து கொண்டு த‌ர‌மான‌ விம‌ர்ச‌ன‌த்தை த‌ர‌ முய‌ற்சிக்கிறேன்.
//சம்பத்தின் கல்லூரி நண்பர்களான ராமதுரை, அழகர், மாரியப்பன் மற்றும் யாழினி ஆகியோரின் சம்பத் குறித்தான நினைவுகளில் நாவல் பயணிக்கிறது. கல்லூரியில் தமிழ் இலக்கியம் விரும்பிப் படிக்கும் சம்பத்தோடு ராமதுரை, மாரியப்பன், அழகர் மூவரும் நிர்பந்திக்கப்பட்டு படிக்கிறார்கள். சம்பத்தின் வித்தியாசமான வாழ்க்கையும் விசித்திர எண்ணங்களும் மூவரையும் நன்கு கவர்கிறது. சம்பத் யாழினியின் காதலனாக, கடவுள் மறுப்பு கொள்கைகளில் ஈடுபடுகிறான். //

படிக்கும் ஆவலை தூண்டி விட்டீர்கள்.அமேசான் தளத்தில் இந்த நூலை பெற முடியுமா ?

சுட்டி இருக்கிறதா ?
அருமையான விமர்சனம் ஆதவா.. நான் இன்னும் நாவலைப் படிக்க வில்லை.. எஸ்ராவின் எழுத்துக்கள் தரும் வாசிப்பு அனுபவம் அலாதியானது.. என்னுடைய தோழி இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்து பாதியிலேயே நிறுத்தி விட்டார்.. எங்கும் கசப்பின் சுவை நிரம்பிய நாவல் இது என்று சொன்னார்.. உங்கள் விமர்சனம் தெளிவாக உள்ளது.. அருமையாக உள்வாங்கி எழுதி உள்ளீர்கள்.. சீக்கிரம் படிக்கிறேன்..
ஆதவா,
முதன்முதலில் புத்தக விமர்சனப் பதிவை ஆரம்பித்திருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். தேர்ந்தெடுத்த புத்தகமும், தெளிவான நடையும் விமர்சனத்தை அழகூட்டுகிறது. வாழ்வின் மீதான தேடல்களும், நிகழ்வுகளின் மீதான தீராத கசப்புகளும் தொடர்ந்து துரத்திக் கொண்டேயிருப்பவனைப் பற்றிய ‘உறுபசி‘ வாசிக்கும் ஒவ்வொருவரையும் அதன் ருசியில் தனையிழக்கச் செய்யும். நம்மில் பலருக்கும் வாய்த்திருக்கக்கூடிய அனுபவங்களான மீளாத் துயரமும், அனுபவியா சந்தோஷமும் பரவி தன்னிரக்கத்தை எதிர்பார்க்கின்ற மனங்களைப் பற்றி எஸ்.ரா. அழகாக கூறியிருப்பார். கதையில் எஸ்.ரா. தடுமாறியிருக்கிறார் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. கதை சொல்லி ஒரு நோக்கில் மட்டுமே தனது கதையைக் கூறிச்செல்லாமல் பன்முகப் பார்வையிலும் சொல்லியிருக்கலாம். மிகவும் சந்தோஷமான விஷயம் என்னவென்றால், புத்தகத்தின் மீதான விமர்சனம் என்பதைவிட, ஒரு படைப்பின் மீதான கருத்துக்களை விருப்பு வெறுப்பற்று பதிவு செய்யும் மனநிலை வாய்த்த தங்களின் முதல் முயற்சிக்கு, ‘உறுபசி‘ வாசிப்பனுவம் கிடைத்ததுதான். தொடர்ந்து வாசிப்பு கருத்துக்களை பதிவு செய்ய வாழ்த்துக்கள்.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
//உலர்ந்த சொற்களால் இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது என்ற வரியே நாவலை வாங்கத் தூண்டியது என்றும் சொல்லலாம். //

கண்டிப்பாகத் தூண்டுகிறது..
ரத்தமும் சதையுமாக சொல்லி இருக்கிறீர்கள்... தொடரவும்..
ஆதவா said…
உங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க

செய்யது. இவை உயிர்மை தளத்தில் கிடைக்குமென்று

நினைக்கிறேன். பொறுங்கள் சுட்டி தேடித்

தருகிறேன்.. உங்கள் விமர்சனத்தையும் மிகவும்

எதிர்பார்க்கிறேன்.. இந்த நாவல் எனது வாசிப்பை

நீட்டியிருக்கிறது என்றால் அது மிகையல்ல. மற்ற

புத்தகங்களையும் தேட ஆரம்பித்திருக்கிறேன்...

நன்றீங்க செய்யது..
----------------------------------
உங்கள் தோழியை தொடர்ந்து படிக்கச் சொல்லுங்கள்

கார்த்திகைப் பாண்டியன். கசப்பின் வர்ணத்தை

அவர்கள் கொஞ்சம் பூசிக்கொள்ளட்டும்.. அது

தேவையானது... மிக்க நன்றிங்க//
------------------------------------
நன்றிங்க அகநாழிகை. கொஞ்சம் தயக்கமாக

இருந்தது விமர்சனம் எழுத, அதற்கு காரணம்

உங்களுக்கே தெரியும். தவிர, இம்மாதிரி பதிவு எழுதி

பழக்கப்பட்டவனில்லை. தவறாகப் போய்விடுமோ என்ற

அச்சமும் இருந்தது..

எஸ்ராவின் தடுமாற்றம் கதையில் இல்லை.. ஓரிடத்தில் மாரியப்பன் என்று சொல்லிவிட்டு அழகராகத் தொடர்கிறார். இன்னொரு இடத்தில் வாக்கியப்பிழை.. மற்றுமொரு இடத்தில் கதைசொல்லியான அழகர், வேறொரு மனிதர் வாயிலாக வெளிப்படுகிறார்.... எனக்கு இது முதல் அனுபவமாக இருப்பதால் சட்டென்று சரியாகச் சொல்ல முடியவில்லை...
நான் படிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் நாவல்களில் இதுவும் ஒன்று. நல்ல விமர்சனம். நன்றி.
Rajeswari said…
அருமையான விமர்சனம்.கண்டிப்பாக வாங்கி படிக்க தோன்றுகிறது.
முதல் விமர்சனமா? நம்ப முடியவில்லை..மெச்சூரிட்டியாய் உள்ளது..

வாழ்த்துக்கள் ஆதவா..
ஆதவா said…
http://www.uyirmmai.com/Publications/AuthorDetails.aspx?aid=102

இங்கே அவருடைய எல்லா புத்தகங்களும் கிடைக்கும்!!
---------------
நன்றிங்க கடைக்குட்டி.. வாசித்துப் பாருங்கள்.
Suresh said…
மச்சான் வந்துட்டேன் படிச்சிட்டு வரேன்
நல்லா இருக்கு ஆதவன் விமர்சனம்...எஸ்.ரா வின் எழுத்துக்கள் பழக்கமென்றாலும் ”உறுபசி” இன்னும் படிக்கவில்லை...உங்கள் விமர்சனம் அதை படிக்கத்தூண்டுகிறது...
//(இது என் முதல் புத்தக விமர்சனம். குறையிருப்பது அறிவேன். குட்டினால் தெளிவேன்.)//

குறை எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை...வாழ்த்துக்கள் ஆதவன்...
முதல் புத்தக விமர்சனத்திற்கு
நண்பர் ஆதவனுக்கு என் மனமகிழ்ந்த பாராட்டுக்கள்.

நான் இன்னும் நாவல் வாசிக்க ஆரம்பிக்கவிலை ஏனோ அதன் அதை உங்களை போல ஒதுக்கியே வைத்து வந்திருக்கிறேன். உங்கள் இப்புத்தக விமர்சனம் என்னை பொருத்தவரை எந்த நெருடலும் குறையும் இருபதாய் இல்லை. வாசிப்பனுபவத்தில் அதை உள்வாங்கி கிரக்கித்துக் கொண்டு மிக அருமையா எழுதியிருக்கீங்க ஆதவன்.
அதன் அனுபவமே உங்கள் எழுத்து என்று சொல்லலாம். மேலும் உங்கள் எழுத்து நடை சிறப்பானது அதை தொடருங்கள். எஸ்.ராவின் சிறுகதை கட்டுரைகள் படித்திருக்கிறேன். படித்துக் கொண்டும் இருக்கிறேன், அவர் எழுத்து எப்பவுமே அலாதியானது,
மிகச்சிறந்த அனுவத்தை தருபவை.
நாவல் படிக்க முயற்சிக்கிறேன் அது உறுபசியாக இருக்கலாம்.


நல்ல முயற்சி.
அதை சிறப்பா செய்து இருக்கீங்க ஆதவா தயக்கம் கொல்லாதீர்கள்.
தொடர்ந்து புத்தக விமர்சனம் அல்லது புத்தக அறிமும் பற்றி எழுதுங்கள் ஆதவன்.
உமா said…
எஸ்ரா வின் படைப்புக்கள் எதையும் நான் இதுவரை அறிந்ததில்லை. படிக்கும் ஆவலைத்தூண்டி விட்டது உங்கள் விமைசனம். இதுதானே வெற்றி. அருமையான் விமர்சனம்.
Suresh said…
/நண்பர்கள் கூட உறுபசி என்றால் என்ன என்று கேட்கத் துவங்கினார்கள். பசி உறுதல் என்று சொல்லி சமாளித்து வைத்தேன்.//

அட பாவி மச்சான் இப்படி தான் ;) டிகால் அடிகிறியா அஹா
Suresh said…
//எஸ்.ராமகிருஷ்ணனின் உலர்ந்த எழுத்துக்கள் நன்கு காய்ந்த பாறைகளில் படர்ந்திருப்பதாகவும் அதை என் எச்சிலற்ற நாவில் துடைத்து இழுப்பதாகவும் நாவல் படிக்கையில் உணர்ந்தேன்.//

இதுவே கவிதை டா
Unknown said…
அழகான நடையில் புத்தக விமரிசனம் எழுதி இருக்கிறீர்கள். எஸ்.ரா வின் வாசகர்களில் நானும் ஒருவன். ஆனால் இன்னும் இந்த புத்தகத்தைப் படிக்கவில்லை.

/--நாவலின் ஓரிரு இடங்களில் எஸ்.ராமகிருஷ்ணன் தடுமாறியிருக்கிறார். ஒருவேளை அச்சகப்பிழையாக இருக்கலாம் என்று கருதுகிறேன்.--/

எஸ்.ரா தடுமாறினாரா? தேர்ந்த படைப்பாளி... அதெப்படி....!!!

/-- அல்லது எனது வாசிப்பனுபவத்தின் குறைபாடாகவும் இருக்கலாம்.--/

எதற்கும் மறுவாசிப்பு செய்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்கள் சரி செய்வதை விட... நீங்களே சரி செய்து கொண்டால் இலக்கியத்தின் மீதான ஆர்வமும், வாசிப்பும் அதிகதிக்கும். தொடர்ந்து விமரிசனம் எழுதுங்கள் ஆதவன்.

மகிழ்ச்சியுடன்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.
sakthi said…
உறுபசி. நாவலை வாங்கிய பிறகு உறுபசி என்றால் என்ன என்று தேடத்துவங்கினேன். நண்பர்கள் கூட உறுபசி என்றால் என்ன என்று கேட்கத் துவங்கினார்கள். பசி உறுதல் என்று சொல்லி சமாளித்து வைத்தேன்.

nallave samalichu erukenga aadhavan

alagana vimarsanam

novel padika thundukirathu

kandipa padichu pathutu solren

aadhava
ராம்.CM said…
நல்ல விமர்சனம். ஆனால் மன்னிக்கவும். எனக்கு நாவல் படிக்கும் பழக்கமும் இல்லை,அதற்கான நேரமும் கிடைப்பதில்லை. எழுத்தாளர்களும் தெரியாது.
வணக்கம் ஆதவா,
சக்கரை உங்களை பற்றி என்னிடம் சொன்னார், நீங்களும் திருப்பூர்தான் என்று. நம்பினால் நம்புங்கள் இரண்டு நாட்களுக்கு முன்புதான் உறுபசியை வாசிக்கத் தொடங்கினேன். இன்னும் முடிக்கவில்லை. அதனால் உங்கள் பதிவையும் படிக்கவில்லை. முடித்ததும் நிச்சயம் படிக்கிறேன். ஒரு அறிமுகத்திற்காகவே இந்த பின்னூட்டம்.
முரளி
98433 41223
murli03@gmail.com
முதல் விமர்சனம் போல் தெரியவில்லை ஆதவா.
மிக அருமையாக இருக்கிறது.
விமர்சனம் அருமையா ஆதவா (உனக்கேயுரிய பாணியில்), இது இன்னும் மேலும் படித்துப்பார்ப்போம் என்ற ஊக்கம் வருகிறது

படிக்கனும்...
விமர்சனமே குறுநாவலை அருமையான கதைவரிகளில் சொல்லிருக்கீங்க ஆதவா

இதை படிக்கும்போதே அந்த நாவலை ஓரளவிற்கு முன்னோட்டம் கிடைக்கிறது
அன்பு ஆதவா, ஒரு ஆறு மாதங்கள் இருக்கும், இந்த நாவலை வாசித்து, சம்பத்தின் வாழ்க்கை எனக்குள் ஏற்படுத்திய அலைக்கழிவு அநேகம், அதை மிக அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள்.
Joe said…
எஸ். ராமகிருஷ்ணனின் தாக்கம் மிக அதிகமாகவே தெரிகிறது உங்கள் எழுத்துகளில்.

கதையை அதிகம் விவரிக்காமல் விமர்சனம் செய்திருக்கலாம்.
நல்ல பதிவு!
ஆதவா said…
மிக்க நன்றிங்க
மாதவராஜ்
ராஜேஷ்வரி
சக்கரை மச்சான்
புதியவன்
ஆ.முத்துராமலிங்கம் (எழுதுகிறேன் நண்பரே!)

புதியவர் உமா அவர்களுக்கு வரவேற்புகள்
புதியவர் கிருஷ்ணபிரபு அவர்களுக்கு வரவேற்புகள்

நன்றிங்க சக்தி
ராம்.C.M
புதியவர் முரளிக்கு நன்றியும் வரவேற்புகளும். விரைவில் அழைக்கிறேன்.

நன்றிங்க சொல்லரசன்,
அபுஅஃப்ஸர்
யாத்ரா
ஜோ

அனைவருக்கும் மனமாழ்ந்த நன்றி!!
உறுபசி என்னை மிகவும் பாதித்த நாவல். உங்களுடைய விமர்சன நடையும் அருமை நண்பரே.
நாவல் விமர்சனம் படித்தேன், நன்றாக இருக்கிறது நண்பா! படிக்கத் தூண்டுகிறது. முயற்சியை தொடருங்கள். வாழ்த்துகள்!
நல்ல விமர்சனம் ஆதவன்!

இன்னும் நிறைய படியுங்கள். வாசிப்பனுபவம் எழுத்துக்கு 'கை' கொடுக்கும்.
ஆதவா முதல் புத்தக விமர்சனம் என்று நம்ப முடியவில்லை... ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்து நடையிலேயே விமர்சனம் அமைந்திருப்பதாக தோன்றியது... உண்மையில் அவரது எழுத்துக்கள் படித்த பின்னும் மனதை விட்டு நீங்காமல் அடம்பிடித்து கொண்டு அமர்ந்திருக்கும் வல்லமை படைத்தவைதாம். ஆனால் அவற்றை மறக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டுவனவாய் இருக்கும் அவை... அவரது நெடுங்குருதி என்ற நாவல் இன்னும் வார்த்தைகளோடு மன‌தில் தங்கியிருக்கிறது
ஜீவா said…
ஆதவா. மனதிற்கு பட்டதை சொல்ல்கிறேன் .நானும் உங்களை போலத்தான் . தனி அடையாளம் என்று வித்தியாசமாய் தனிமை , வெறுமை என்று இருந்துள்ளேன் . வாழ்க்கை அழகாய் உள்ளது. சந்தோசங்களும் , துன்பங்களும் சம விகிதத்தில் உள்ளது. உங்களின் விருப்பம் எதை எடுப்பது என்று. சோகங்களை , தனிமை நேரங்களை துரத்தும் மனம் ஒரு நாள் சோர்ந்து போகும் . பார்வைகளை மாற்றி கொள்ளுங்கள் . இன்னும் இன்னும் புதிதாய் ,மகிழ்வாய் நாட்கள் மலரட்டும் தோழமைக்கு .