காலை ஸ்வரம்

காலை ஸ்வரம் கேட்காத
எழுச்சி,
அதிகாரம் இல்லாமல்
வீட்டை நெருக்கும்
சூன்யம்
பிறிதொருநாள் எழுதிவைக்கும்
பிரிவென்ற கவிதை.

அழுது முடித்த மூன்றாம்மாதத்தில்
பெற்றவன் திருமணம் பார்க்கும் வாய்ப்பு
என் தாய்க்கு ஒரு மாற்று.

பச்சிளம் குழந்தையை மீறும்
மென்மை அவளிடம்..
சொல்ல வார்த்தை இல்லை
உண்மை அவளிடம்..

இன்று
அபஸ்வரம் இல்லாத காலை
அதிகார நெருக்கடியைக் குடித்த காலை
பிறிதொருநாள் எழுதிவைக்கும்
பரிவென்ற கவிதை.

ஆயின்
என்றேனும் ஒருநாள்
அம்மாவின் நினைவு வரலாம்
அழுது முடித்த பின் தோன்றும்

"அழாமல் இருந்திருக்கலாம்..."

Comments

//பிறிதொருநாள் எழுதிவைக்கும்
பிரிவென்ற கவிதை.

பிறிதொருநாள் எழுதிவைக்கும்
பரிவென்ற கவிதை.//

மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை...
//அழுது முடித்த பின் தோன்றும்

"அழாமல் இருந்திருக்கலாம்..." //

உணர்வுகளை வார்த்தையில் சொன்ன விதம் அழுகை என்றாலும் அழகு...தொடருங்கள் வாழ்த்துக்கள்...
ஆதவா said…
மிக்க நன்றி புதியவன்......
//அழுது முடித்த மூன்றாம்மாதத்தில்
பெற்றவன் திருமணம் பார்க்கும் வாய்ப்பு
என் தாய்க்கு ஒரு மாற்று.//
வார்த்தைகளால் சொல்ல முடியாத வலி தெரிகிறது.. நல்ல பதிவு..
//ஆயின்
என்றேனும் ஒருநாள்
அம்மாவின் நினைவு வரலாம்
அழுது முடித்த பின் தோன்றும்

"அழாமல் இருந்திருக்கலாம்..." //

உணர்வுள்ள கவிதை.
வித்தியாசமான தளத்தில், காத்திரமான வரிகளுடனான நல்லதொரு கவிதை. அருமை நண்பரே !
ஆதவா said…
அன்பு நண்பர்,
கார்த்திகைப் பாண்டியன்
முத்துராமலிங்கம்
ரிஷான்

ஆகியோருக்கு என் நன்றிகள்..
இன்றுதான் உங்கள் வலைப்பக்கம் வந்திருக்கிறேன். அழுத்தமான வரிகள். இனி அடிக்கடி வருவேன். வாழ்த்துக்கள்.
ஆதவா said…
மிக்க நன்றி மாதவராஜ்... உங்கள் ஊக்கம் எனது ஆக்கத்திற்குத் தூண்டுகோல்..
ஹேமா said…
ஆதவா,எதையோ ஆழக்மாகச் சிந்தித்தே பிறந்திருக்கிறது இந்தக்கவிதை.உட் கரு சொல்லுங்களேன்.
ஹேமா said…
அம்மாவைப் பிரிந்த ஒரு குழந்தையின் அழுகுரலோ இக்கவிதை!

வார்த்தைக் கோர்வைகள் அழகு.
ஆதவா said…
இரண்டாம் பின்னூட்டத்தில் கருவை கச்சிதமாக பிடித்துவிட்டீர்கள்.. இது இரு சூழ்நிலைகளை உள்ளடக்கிய கவிதை... யார் சிறந்தவர் என்று முடிவெடுக்கும் உரிமை பிள்ளைகளுக்கே இருப்பதால் இறுதி வரியில் "அழாமல் இருந்திருக்கலாம்" என்று முடித்திருக்கிறேன்...

மிக்க நன்றி சகோதரி...
Anonymous said…
\\ஆயின்
என்றேனும் ஒருநாள்
அம்மாவின் நினைவு வரலாம்
அழுது முடித்த பின் தோன்றும்\\
ரசித்தேன்...
"அம்மாவின் நினைவு வரலாம்
அழுது முடித்த பின் தோன்றும்

அழாமல் இருந்திருக்கலாம்."

எனது அம்மாவின் நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள். நல்ல கவிதை