ரகசியக் கவிதை.

நான் ஒரு கவிஞை அல்ல.
பெற்றெடுத்து அதை
உலகத்தில் சிறப்பிக்க
ஆனால் கவிஞை ஆக்கப்படுவேன்
இருட்டில் நடக்கும் எண்ணங்களால்

என் நெஞ்சில் கருவொன்று
திணிக்க முயன்றான் ஒருவன்
எண்ணங்களை உடைத்து
துளிகளின் மேலமர்ந்து
கசங்கிய நிலையில்
விதைத்துப் போனான்
ஒரு கவிதை மட்டுமே விளையும் கருவை.

ஆள் அரவமின்றி காய்ந்து கிடக்கும்
ஒரு தாளில் அழுத்தமாய்
புள்ளியிட்டு சென்றுவிட்டான்.
என் கரங்களில் வலிமை இல்லை
வலி ஏற்பட்ட நேரத்தில்
என் கரங்களும் என்னிடமில்லை

என்னை அறியாமல்
திணிக்கப்பட்ட எண்ணக்கருவால்
ஊற்றெடுத்தது கவிதை ஒன்று
ஆம் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும்.
கரு என்ன என்பது அறியேன்
ஆனால் கவிதை நிச்சயம்.

யாவருக்கும் ஏற்பட்ட
அதே காலத்தில்
கவிதை பெற்றெடுத்தேன்
என் கூரைக்குக் கீழே
ஒழுகும் தண்ணீரில்
கவிதை கரைந்துவிடக்கூடும்
ஆக அது வைக்கப்பட வேண்டிய
இடத்திற்கு வைக்கப்படவேண்டும்

திணித்தவன் எங்கோ ஒரு இடத்தில்
பிரச்சாரம் செய்து கொண்டிருக்கக்கூடும்
கவிஞை ஆக்கப்பட்டவளாகிய நான்
இதை என்ன செய்ய என்று அறியாமல்...

கண்களில் பட்டது....
தவறுகளையும், கழிப்பவைகளையும்
மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளும் களம்.
என் கவிதையை ஏற்றுக் கொள்ளுமா?
இருக்கட்டும்.
ரகசியக் கவிதையான இது
அங்கேயே வைக்கப்படும்.
இழந்த சோகத்தையும்விட
என் நெஞ்சிரண்டும் வலித்தது
கவிதையை வளர்த்திவிட

என் ரகசியக் கவிதை
எனக்குத் திணிக்கப்பட்ட கவிதை
என்னை வலிக்கச் செய்த கவிதை
வேறொரு பெயரிலாவது
புகழ் பெறட்டும்...
என்னோடு இருந்து
மழையின் துளிகளுக்கும்
வெயிலின் தாக்கத்திற்கும்
தாள் கிழிந்து போக வேண்டாம்.

Comments