தெய்வக் குடிலுக்குள்.....

குளத்துப் படிகளில் மண்டியிட்டு
நீ அள்ளி வீசிய தண்ணீரின்
தெறிப்பை பார்த்து மகிழுவேன்.
குளத்து மீன்கள் வெட்கலாம்
நான் இரைத்த பொரிகளை தின்றுவிட்டு...

கொலுசாணியை சரிபார்க்க
முதல்படியில் நீர் நனைய
கால் பரப்புவாய்.
வெட்கி ஓடும் நீரைக் குடிக்க
அந்த வெட்கமில்லா மீன்கள்
தலைதெறிக்க ஓடும்..

பொரிகளுக்கு ஏங்கிய மீன்கள்
நீ விரித்த
பொறிகளுக்கு மாட்டியது
ஆச்சரியமல்ல...

உன் நனைந்த ஆடைகளைப்
பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டவாறு
சுவாசத்தைப் பருகுவேன்.
பாவாடையை முறுக்கி விட்டு
நான் கவனிக்கிறேனா என்று
சிரிப்பாய் வெட்கம் வழிய.........

உன் தோளணைத்து குளக்கரையில்
அமர்ந்திருப்போம்,
துணிகள் ஆதவனின் கதிர்களால்
உலரும் வரை...
நீயும் நினைவுகளோடு பேசுவாய்
அவன் கதிர் வீசுவதை நிறுத்திவிட்டு
உன்னுடன் உளரும் வரை...

எழுந்தோம்; நடந்தோம்.

ஆன்மீகம் குடிகொண்டிருக்கும்
ஒரு சிலையை வணங்குவதற்கு முன்
ஒரு பூக்கடைக்குப் புறப்படுவோம்
ஒப்பனைகள் புரிய..

வண்டுகள் மொய்த்துக்கொண்டிருக்கும்
பூக்களில் எல்லாம் உன் வாசனை
உன் கூந்தல் சுற்றி இப்போது
வண்டுகளின் கூட்டங்கள்

உன் கூந்தலில் ஏறிவிட்டு
உதிறும் பூக்கள் எல்லாம்
உதிரம் கொட்டிக்கொண்டு செல்லும்
கூந்தல் ஏறிய பூக்களோ
கனத்துப்போய் ஏளனமாய் பார்க்கும்.

என் கரம் பிடித்தவாறு
ஒரு குழந்தையாக தவழ்ந்து வருவாய்.
தரிசன வரிசையில்..
உன் வியர்வைகளை
என் ரேகைகள் ருசிக்கும்
உன் ஈரத்தை என் மனம் ரசிக்கும்

இறுதியாக அந்த சிலை வந்ததும்
நான் வணங்குகிறேன் சிலை நோக்கி
நீ திரும்பி நிற்கிறாய் என்னை நோக்கி,,,

ஒரு தெய்வக் குடிலுக்குள்
உயிருள்ள என்னை
தெய்வமாக்குகிறாய்
நானோ உயிரற்ற ஒரு கல்லை
தெய்வமாக்கப் பார்க்கிறேன்..

Comments