இரத்த அழுத்தம்!

1996 ஆம் ஆண்டு காலம் மாறிப் போச்சு என்ற சினிமா வந்தது, பாண்டியராஜன், வடிவேலு, சங்கீதா, சரளா போன்றவர்கள் நடித்த திரைப்படம். அதில் சங்கீதாவின் அம்மாவான வடிவுக்கரசிக்கு ஒரு வாக்குவாதத்தில் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்திருப்பார்கள். ஒரு பெட்டில் படுத்திருக்கும் அவரை, டாக்டர் பரிசோதித்தபிறகு வந்து சொல்வார் “ உங்கம்மாவுக்கு ஏற்கனவே இரத்தக்கொதிப்பு இருந்திருக்கு, பத்தாததக்கு அவங்க மனசைப் பாதிக்கிறமாதிரி ஏதோ ஒண்ணு நடந்திருக்கு, இதெல்லாம் ஒண்ணா சேந்ததனால மூளையில இருக்கிற இரத்தக்குழாய் வெடிச்சிருச்சு, என்னால முடிஞ்சவரைக்கும் எல்லா ட்ரீட்மெண்டும் கொடுத்திருக்கேன்” என்பார். இந்த வரிகள் ஒரு மறக்கமுடியாத சம்பவத்தை ஞாபகப்படுத்தியது. மூளையில் உள்ள இரத்தக் குழாய் வெடித்திருந்தால் முதலில் அதுதான் பிரச்சனையா என்று ஸ்கேன் எடுக்காமல் சொல்லமாட்டார்கள். இரத்த அழுத்தம் Systolic, Diastolic என இரண்டு வகையில் குறிப்பிடுவார்கள், ... இதயம் சுருங்கும்பொழுது ஏற்படும் அழுத்தம் சிஸ்டலிக், இதயம் விரிவடையும் பொழுது ஏற்படுவது டயஸ்டலிக், சுருக்கமாகச் சொன்னால், லப் என்றால் Systolic, டப் என்றால் Diastolic. இவையும் சர்க்கரை அளவைப் போலவே 120-80 என்ற கணக்கில் இருக்கவேண்டும், மேலதிக தகவல்களுக்கு கூகிளில் தேடலாம். (நான் மருத்துவரல்ல) இவை எப்பொழுது 200ஐத் தாண்டுகிறதோ, அப்பொழுது நீங்கள் பவுல்ட் ஆகப்போகிறீர்கள் என்று அர்த்தம். மாமாவுக்கு இந்த பிரச்சனை திருப்பதி தரிசனத்திற்காக வரிசையில் நின்றுகொண்டிருக்கும்பொழுது ஏற்பட்டது. எங்களில் யாரும் உயர் இரத்த அழுத்தம் பற்றி சினிமாவில் கேட்டதோடு சரி, அதன் விளைவுகளைப் பார்த்தவர் கிடையாது. மாமாவுக்கு இடதுபுறம் மட்டும் செயலிழந்து வாய் கோணியது, கைகள் மரத்துவிட்டிருந்தது. அதுதான் முதல் அறிகுறி. ஸ்ட்ரோக் (அதற்கு முன்னரேயே தலைவலிக்க ஆரம்பிக்கும்) . மூளையில் இரத்தம் அப்போதுதான் வெடித்திருக்கும். சத்தமில்லாத வெடிகுண்டு. பிறகு செல்போன் பேட்டரி லெவல் குறைவது போல, மூளை கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை இழக்கத் தயாராக இருக்கும் நொடி அது. மூளை முதலில் கட்டவிழ்த்துவிடுவது, சிறுநீரையும் மலத்தையும் தான். சிறிதுநேரத்திலேயே வெளியேறிவிடும், அவர் அறியாமலயே.. அப்போதுவரைக்கும் தனக்கு இவையெல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது தெரியாது.. மாமா அப்படித்தான் இருந்தார். பின்னர் சாப்பிட்ட உணவும் வாந்தியாகிவிடும். அதுதான் மூளை செய்த கடைசி வேலை என்பது எங்களுக்கும் தெரியாது. திருமலையிலேயே மருத்துவர்களுக்கு இதுதான் விஷயம் என்பது தெரிந்துவிட்டது. கீழ் திருப்பதிக்குச் சென்று பரிசோதித்துக் கொள்ள சொன்னார்கள், மூளை எதையெதையோ ஞாபகப்படுத்தும், உளறினார். திருப்பதி அரசு மருத்துவமனையில்தான் விஷயம் தெரியவர ஆரம்பித்தது, மருத்துவர்கள் எந்தவித தயக்கமுமில்லாமல் பக்கவாதம் வந்துவிட்டது என்றார்கள், எனக்கு என் மனதில் பக்கவாதம் ஆகிவிட்டது போல இருந்தது. எனக்கு சட்டென நிலைமை புரிந்துவிட்டது, சரி, இனி என்ன செய்யலாம், இவர் எப்போது வீட்டுக்குப் போகமுடியும் என்றேன். கோமாவில் இருக்கிறார் என்பதையும் புரிந்து கொண்டுதான் கேட்டேன்.. தலைக்கு ஒரு எம்.ஆர்.ஐ எடுக்கச் சொன்னார்கள். பிறகுதான் முழுவிபரமும் தெரிந்தது. அந்த மருத்துவருக்கு முன்பே தெரிந்திருக்கலாம். ஆனால் நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை. என்னிடம் சொல்லும்போது என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை, ஏனெனில் நான் ஒருவன் மட்டுமே அங்கே ஆங்கிலம் புரிந்து கொண்டவனாக இருந்தேன். இதை தங்கையிடம் சொல்லவேண்டும்.. ஹைபர்டென்ஷன் என்று சொல்லப்படுகிற இந்த தீவிரவாதியின் வன்முறைக்கான காரணம் என்னவென்று எங்களால் சொல்லமுடியவில்லை, ஒவ்வொருவரும் தனக்குத் தகுந்த காரணத்தை வடிவமைத்துக் கொண்டார்கள். எல்லாரையும் பார்ப்பதற்கு வெறுப்பாக இருந்தது. வேலூர் சிஎம்சிக்குச் சென்றும் பயனில்லை, மூளையில் விபத்து ஏற்பட்டால் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு என்பதையும் சினிமாதான் எனக்கு போதித்திருந்தது. பெரும் செலவு செய்தால் ஒரு சதவிகிதம் காப்பாற்ற முடியும். ஆனால் ஆயுளுக்கும் பக்கவாதம் தான். அல்லது கோமாவிலேயே இருக்கவேண்டியதுதான். ஒருவாரத்தில் இறந்துவிட்டார். ஒருசமயத்தில் நாங்கள் அவர் இறப்பதே பரவாயில்லை என்றுகூட யோசித்தோம், ஏனெனில் அவரை அந்த நிலையில் தினமும் பார்க்கவே முடியவேயில்லை, முடிவோ மிக நிச்சயமாகத் தெரிந்துவிட்டது. அவர் இறக்கும் வரையிலும் மூன்னூறை விட்டு இரத்த அழுத்தம் இறங்கவேயில்லை... ஆகவே எந்தவொரு தானமும் செய்ய முடியாது என்றுவிட்டார்கள். இறந்து போன என் மாமாவுக்கு மூன்று வயதில் குழந்தை இருந்தது. இப்ப்போது நான் மீண்டும் “காலம் மாறிப் போச்சு”க்கே வருகிறேன். வடிவுக்கரசி கண்விழித்து சங்கீதாவைப் பார்ப்பார். எல்லாரையும் ஒருமுறை பார்ப்பார், பிறகு இறந்துவிடுவார். இரத்த அழுத்தம் அதிகமாகி மூளைவெடிப்பு ஏற்பட்ட ஒருவர், முழித்து கண்ணீர் மழ்க பார்த்து வசனம் பேசி இறப்பதெல்லாம் சினிமாவில்தான். நிஜத்திலும் அப்படி இருந்திருக்கலாமோ என்று தோணவைக்கும் காட்சிதான் அது. திரைப்படத்தில் சொல்வது போல ஏதோ ஒரு சம்பவத்தின் அழுத்தம் மட்டுமே காரணமல்ல, எந்தவொரு சம்பவ அழுத்தமுமில்லாமல் இரத்த அழுத்தம் வரலாம்... ஃபேஸ்புக் நிலைத்தகவலுக்காக எழுத ஆரம்பித்து இறுதியில் கொஞ்சம் பெரிதாக வலைப்பதிவில் பதிவிடும்படி ஆகிவிட்டது, ஃப்லோ கொஞ்சம் மாறி மாறி இருக்கலாம். தகவல் தேவையானது. அன்புடன் ஆதவா.

Comments